THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Tuesday, December 12, 2006

நினைவு நீரோடையில்…

சற்றே பெரிய சிறுக(வி)தை

நினைவு நீரோடையில்…
கவிதை பொருள் : காதல்

கல்லூரி நூலகம்

காற்றோடு பேசுவதற்கு
கற்றுக்கொடுத்தது
அவளது முதல் சந்திப்பு…

அவள் சிரித்த நிமிடங்கள்
சில வினாடிகள் மட்டும்…
அதைப் பற்றிய சிந்தனைகள்
பல கோடிகள் எட்டும்…

அழகின் இலக்கணம்
அத்துப்படி ஆகும்
அவளை ஒருமுறை
அருகினில் கண்டால்…

இரும்பைக் விசை கொண்டு
இழுக்கும் காந்தத்தை போல
இதயத்தை சுண்டி இழுத்தாள்
கண்களால் என்னை ஆள…

காற்று கூட சொல்லாத
கவிதை ரகசியங்களை என்
காதில் சொன்னது அவள்
கால் கொலுசு !
பூமியிடம் அன்பாய் பேசியவாறு
அரவணைத்து சென்ற அவளது
கால் பாதங்கள் தான்
நான் ரசித்த முதல்
இயற்கை ஓவியம் !


காற்றிடம் ஏதோ மெல்லிய
கவிதை சொல்வது போல
மெதுவாக அசைந்து எங்கும்
மணம் பரப்பியது அவள் துப்பட்டா…

அவளை பூமிக்கு
அனுப்பிவிட்டோமே என
அனுதாபம் தெரிவிக்க
துக்க தினம்
கடைப்பிடித்தது வானம்…
அமாவாசை யன்று !

பூக்களின் மேல் எனக்கு
பூத்தது கோபம்,
அவள் கூந்தல்
என்று அறிந்;தும்
அவை வாடியபோது…

மரப்படுக்கைகளில்
மரத்துப் போய் கிடக்கும்
புத்தகங்களை படிப்பதை விட
மயிலிறகாய் அந்த
புத்தகங்களை வருடும்
உன் மரகத விரலசைவை
உன்னிப்hக கவனிக்கவே
பிடித்தது எனக்கு…!

படிப்பாளி போலவே
நூலகத்தில் நான் சுற்றுவது
படிப்பதற்கு அல்ல என
எனக்கு மட்டுமே தெரியும் !…

அவள் பெயருக்கு பின்
ஆவலாக எனது பெயரையும்
வருகை பதிவேட்டில் வேகமாய்
பதிவதை காண்போருக்கு மட்டும்
எளிதில் இது புரியும் !…

உள்ளத்தில் ஓரமாய் எங்கோ
உறங்கிக் கிடந்த உணர்வுகளை
எட்டி உதைத்து உலுக்கி
எழுப்பியது அவள் முகம்...

கட்டுரை போலவே
சென்று கொண்டிருந்த
வாழக்கை
திடீரென கவிதையானது,
காதல் வந்தது…!

கட்டுரைக்கு முடிவுரை உண்டு
கவிதைக்கு தான் முடிவில்லை!

காற்றை போல உயிரோடு
கலந்து விட்டாள் அவள்……
நேற்று பார்த்தேன் என்றாலும்
இன்றும் காண ஆவல்…

படிக்க வந்த என்னை
துடிக்க வைத்தாய் நீ…
வடித்த கண்ணீர் சொன்னது
அடி நெஞ்சில் தீ…

அவமானங்களும் பிடிக்கும்
அவள் ரசித்து பார்த்தால்…
விஷம்கூட இனிக்கும்
அவள் விரும்பி தந்தால்…

உதாசினம் என்ற பெயரில்
உதறிச் சென்றாய் என்னை !
உன்னால் உள்ளத்தில் உதித்த
கவிதைகளுக்கு நீயே அன்னை !

'வீழ்வேன் என நினைத்தாயோ ?'''
பாரதியின் வைர வரிகள்…
'வாழ்வேன்''என சென்னது
வாழ்த்திய உன் விழிகள்...

விலகி சென்று வாழ
விரும்பியது என் இதயம்…
விரட்டிய உன் பார்வையால்
எங்கும் நினைவுகள் உதயம்…

நினைவுக் கத்தியால் குத்தப்பட்டு
நித்தம் நெஞ்சில் வடிந்திடும்
இரத்தத் துளிகளில் அமர்நது
சத்தமிட்டு சிரிக்கும் பெண்ணே !
சாவும் வரம்;தான் என்பேன்
உன்னோடு சாய்வதென்றால்…

ஏனோ வந்தாய் ?
ஏனோ சென்றாய் ?
'மானோ மயிலோ''
நானோ கவியாய்……
எதற்கு சுற்றுகிறோம்
என்றறியாத புவியாய்……

உன்னால் முளைத்த கவிதைகளை
உன்னிடம் கொடுத்தேன் படிக்க…
உனக்கு ஏனோ எதனாலோ
நேரமில்லை அதை ரசிக்க…

'நல்லா இருக்கிறது'' என்று
எல்லோரையும் போல சொன்னாய்…
உள்ளார்ந்த அதன் உணர்வை
உணராமல் நீயோ சென்றாய்…

படிக்க நேரம் கிடைக்காமல்
பாதி கவிதைகள் படித்தாளாம்…
வெடிக்க விருந்த மனக்குமுறல்
துடிப்பு குறைய அடங்கியது,
'அதையாவது படித்தாளே ! ''

காக்கும் பெற்றோரை மறந்து
காதலி உன்னை நினைந்து
போக்கு மாறிய மனிதனாய்
போதையில் உளறும் கிறுக்கனாய்
மாறினேன் நான் ஏனோ ?
மாற்றியது காதல் தானோ ?

கேள்விக் கணைகளில் உள்ளம்
விழியில்; கண்ணீர் வெள்ளம்
ஊசியைக் கண்ணில் குத்தி
உதட்டில் சிரிப்பை வைத்தேன்
உன்னை எண்ணி...
என்னை மறந்து……

பார்த்த பார்வைகள் எல்லாம்
பாசத்தடன் என்று நினைத்தேன்
பாவை உன்னை எண்ணி
பகலிலும் கனவில் திளைத்தேன்…

தீர்வை எண்ணி நாளும்
சிரித்து உடல் இளைத்தேன்
வியர்வை கண்ணில் வடித்தும்
கவிதை இயற்றி பிழைத்தேன்…

நேற்று பார்த்தது போலவே
நெஞ்சில் உனது முகம் !
காற்றில் உன்சுவாசம் இருப்பதால்
சுவாசிக்க கூடவொரு சுகம்…

போற்றி புகழ்ந்து உன்னை
என்ன செய்ய போகிறேன் ?
தூற்றாமல் மட்டும் இரு
துணிவுடன் நான் சாகிறேன்…

வாட்டி என்னை வதைக்கும்
வயதுவந்த வாடா மலரே !
ஏட்டில் வளரும் காதல்
என்போல் ஓரு சிலரே !

பாட்டுக் கவிஞனாய் என்னை
மாற்றி யமைத்த மணியே !
நோட்டில் உன்னை எழுதி
நோகி அழுதேன் தனியே !

நாட்டைப் பற்றியே பேசி
நான் திரிவது கண்டு
வீட்டை நினைக்க சொல்வாய்
விளக்கம் புரிந்தது இன்று !
நான் மட்டும் தனியே
என் வீட்டில்……

கல்லூரி முடிந்தது

கடைசி நாளில் உன்னை
கண்கள் கசிந்திட பார்த்தேன்
உடைக்கப் பட்ட மனதில்
உன்னை எண்ணி நீர்த்தேன்..

சென்று வரேன்' என்று
செல்லமாக நீ சிரித்தாய்
என்று வருவாய் ?'என்று
சொல்லாமல் ஏன் மறைந்தாய் ?

ஏக்கத்தில் அழுத மனம்
இடம் மாறியே போனது
தூக்கத்திலும் உன் பிரிவு
துக்கத்தை தினம் தந்தது…

தாக்கத்தை ஏற்படுத்தி நீயோ
தவிக்க விட்டு சென்றாய்
தேக்கத்தில் தேம்பி அழுதேன்
தேவதை வந்து நின்றாய்,
இரவு நேரத்தில்;
இரவல் வாங்கிய
நிமிடங்களில்
கனவாக கனவிலே…

பிரிவு வந்த நாளில்
பிழை யேதும் இல்லை
முடிவு இல்லாக் காதல்
முறிந்த பின்னும் தொல்லை…

செல்லுமிட மெல்லாம் எங்கும்
கொல்லும் உந்தன் புன்சிரிப்பு
துள்ளும் அந்த நினைவுகளால்
உள்ளம் எங்கும் பூரிப்பு !

முற்றுப்புள்ளி வைத்திடவே
முடிந்தேன் என்றாலும்
முடியவில்லை என்னால்…
முற்றுப்புள்ளி யெல்லாம்
முடிவுரை அல்ல
புரிந்துகொண்டேன் பின்னால்…

உண்மை தான்…
முற்றுப்புள்ளி யெல்லாம்
முடிவுரை அல்ல
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பமே .

'காதல் ''
வலிகளின் ராணி
வாழ்வின் ஏணி…

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Monday, December 11, 2006

சற்றே நில் தோழா…...

சற்றே நில் தோழா…...
கவிதை பொருள் : தமிழ் தேசியம் (சமூகம்)

தோழா… தோழா…
சற்றே நில்…

எங்கே செல்கிறாய் வேகமாக ?
எம் மண்ணில்
பிறந்த தமிழனே !

கரைவேட்டி வேடம் போட்டு
சகத் தமிழனை ஏமாற்றி ஓட்டு
பிச்சைக் கேட்க செல்கிறாயா ?

இல்லை
திரை மறைவில் இருந்து
ஒட்டு போட்டு மீண்டுமொரு
திருடனை தேர்ந் தெடுத்து
நீயாகவே ஏமாற போகிறாயா ?
இரண்டுக்கும் தானோ ?

'ஓ' சனநாயக கடமையல்லவா ?
ஏமாறுவதும் ஏமாற்றுவதும் கூட
சனநாயக கடமையா ? சொல்..

அண்டம் முழுக்க தாமே
ஆள்வது போல் எண்ணி
குண்டர் களைக் கொண்டு
'சனநாயக கடமை' நிறைவேற்றிய
ஒட்டுப் பொறுக்கும் கட்சிகளின்
வெறி யாட்டத்தை பார்த்த பிறகும்
ஓட்டுப் போடத் துடிக்கிறாயா ?

புரிகிறது உனது துடிப்பு !

இருள் நிறைந்த உன் வாழ்வில்
இனியாவது ஒளியேறும் என்று
சனநாயகம் காக்க செல்லும்
சகத் தமிழனே
இனியும் ஏமாறாதே
'சனநாயகம்' என்று
சதி அரசியல் நடத்தும்
சதிகார கும்பல்களிடம்…

அதிகாரப் பசிக்காக
அடித்துக் கொள்ளும்
அற்பமான அரசியல் கட்சிகள்
சதிகார கும்பல் ஆட்சியேற
எச்சரிக்கும் ஆரம்ப காட்சிகள் !

சாதி இன்றி வாழ்ந்து சாதிக்கலாம்
மதம் இன்றி மகத்துவமாய் வாழலாம்
ஆதி மனிதன் காலந் தொட்டே
மொழி யின்றி எவரேனும் வாழந்ததுண்டா ?

நாதி கெட்ட அரசியல் வாதிகளால்
நீதி மறந்து தெருவில் நாமும்
மோதிக் கொள்வது ஏனென்று
என்றாவது எண்ணிய துண்டா ?

கருத்து வேறுபாடுகள் கொண்ட
கட்சிகளில் பிரிந்து கிடந்தாலும்
இருப்பது நாம் அனைவரும்
இதே தமிழ் மண்ணில் தானே ?

உனக்கும் எனக்கும் எவருக்கும்
உறவும் உயிரும் தமிழ் தானே !
ஏனடா பிறகு சண்டை ?
ஏறுவதில் யார் முன்னணி என்றா ?
ஏமாற்றுவதில் யார் முன்னணி என்றா ?

உனக்கும் இங்கு யாவருக்கும்
உணவைப் படைத்த விவசாயி
தஞ்சை தமிழ் மண்ணில்
உணவின்றி தவித்த போது
உதவநீ அடித்துக் கொண்டாயா ?

காவிரி ஆற்றின் கரையில்
கண்ணீர் வடித்து துடித்த
விவசாயத் தோழர் களின்
வாழ்வு நிலை உயர
விரக்தியில் நீ சண்டை போட்டாயா ?

நம்மின மக்கள் ஈழநாட்டில்
சிங்களக் காடை யரால்
நசுங்கி சாகிற போதும்
நரகாசுரன் பெயரால் நீயோ
பட்டாசு வெடித்து அல்லவா
கொண்டாடிக் கொண்டி ருந்தாய் !

இந்திய நாட்டின் முதற் குடியாய்
தமிழன் வீற்றிருக்கும் போதே
இலங்கைத் தீவில் நம்மினம்
அழிவதை தடுக்க முடிந்ததா ?

உடலை உழைப்பால் வருத்தி
உணவுக் காகவே நெசவு
செய்து பிழைத்து வந்த
நெசவாளர் படைத்த துணிகளை
வாங்கவே மனமில்லை உனக்கு !

பாவம் !
உனக்கெங்கே நேரமிருக்கிறது ?

அந்நிய மோகத்தால் சீரழிந்து
அவர்தம் கழிசடைப் பொருட்களை
'ஜீன்ஸ் டீ-சர்ட்' எனத் தேடவே
நேரம் சரியாக இருக்கிறது !

தண்ணீரைத் தர மறுத்து பேசும்
கன்னடர் களுக்கு சொரனையே
நமது வேதாரண் யத்திலிருந்து
போகும் உப்பால் தான் பிறக்கிறது!

காலங் காலமாய் அதை
சுவைத்து உண்ட தமிழா
உனக்கது பிறக்கப் போவது
எப்போது ?

நிலத்தை சுரண்டி சுரண்டி
நிலக்கரி எடுத்து கொடுத்து
நீர்தர மறுக்கும் மாநிலங்களுக்கே
மின்சாரம் தருவது தான்
தமிழனின் வாழ்வியல் பண்பு !

வெறும் பண்பை மட்டும்
வைத்துக் கொண்டு
நீரில்லாமல் தவித்த நிலங்களுக்கு
பாசனம் செய்ய முடியாது !

பண்பை போற்றி வளர்த்துவிட்டு
பசியில் தவிப்பது தகுமா தமிழா ?

மற்றவர் உண்ண
சோறு படைத்தவன்
பெற்றது என்னவோ
வெறும் வறுமையை தான்…


வரி என்ற பெயரில்
இந்திய மைய அரசுக்கு
வாரிக் கொடுக்கும் தமிழனே
அந்நியன் வந்த போது
எதற்காக அவனை எதிர்த்தாய் ?

உரிமை பற்றி பேசினால்
ஊமையாகும் மைய அரசுக்கு
அடிமையாகி போனாயே இன்று !
சுதந்திரம் உனக்கு எதற்கு ?

இந்தியம் பேசும் தமிழனே
இங்கிருப்பதை சுரண்ட வரும்
மற்ற மாநில மக்களை
என்றாவது கவனித்ததுண்டா ?

அடகுக்கடை மார்வாடியிடம்
அடிமைப்பட்டது தமிழனின்
பணமும் பொருளும் மட்டுமல்ல
மானமும் மரியாதையும் கூட…

எங்கிருந்தோ புறப்பட்டு
இந்தியன் என்று சொல்லி
இங்கு வந்த மார்வாடிகளை
எந்த தமிழனாவது போவென
விரட்டியடித் திருப்பானா ?

மகாராஷ்டிர மண்ணில்
கூலி வேலைக்கு
பிழைக்கச் சென்ற
தமிழர்களை விரட்டினர்…

காரணம்
மண்ணின் மக்களுக்கே
உரிமையாம்…

அதே வார்த்தையை
நம் தமிழ் மண்ணில்
உரக்கச் சொன்னால்
நாம் 'தேசத் துரோகி'
'பிரிவினைவாதி'…

இல்லாத இந்திய தேசியம் பேசி
இன்னும் உன்னை சுரண்டுவதை
இனியாவது சற்று யோசி !

அந்நியர் நம்மை ஆண்ட போது
மண்ணின் மானம் வீரம் காக்க
தன்னுயிர் மறந்து போராடி வென்று
இன்னுயிர் நீத்த மூதாதையர் போட்ட
விதையில் முளைத்த தமிழா !

தண்ணீர் ஊற்ற தானாய் வளர
தமிழா நீ தாவரச் செடியல்ல !
செந்நீர் சிந்தி முன்னோர் வளர்த்த
நிழல் தரும் விருட்சம் !

நிழலை மட்டும் தந்துவிட்டு
காய் கனிகளை பக்கத்து
தோட்டத்தில் விழும்படி ஏனோ
போட்டுக் கொண்டி ருக்கிறாய் !

உன்னை தாங்கி நிற்கும்
தமிழ் நிலத்திற்கு நீ
என்ன செய்தாய் ? சொல்…

புல்கூட மிதிபட்டால் தானாய்
எழுந்து நிற்க முயலும் !
தமிழா நீ புல் அல்ல
புலியென
என்று உன் மனம் உணரும் ?

இந்திராவை சுட்டு கொன்ற
சீக்கிய இனத்தை சேர்ந்தவர்
இந்தியாவின் பிரதமராக கூட வரலாம்…

ஆனால்
ராசிவ் காந்திக் கொலையுடன்
சம்பந்தப் பட்ட தமிழர்கள்;
சமஉரிமைக்கு போராடினால் கூட
அது தீவிரவாதமாம்…
சம்பந்தப்பட்டவர்கள் தமிழர்கள்
என்ற ஏளனமெ அதற்கு காரணம் !

இந்திரா காந்தி இறந்த போது
துக்கம் தாளா முடியாமல்
தற்கொலை செய்து கொண்டவர்கள்
அத்தனை பேரும் தமிழர்களே !

பச்சைத் தமிழனையே
யார் அவரெனக் கேட்டு
கொச்சை படுத்தியவரைக் கூட
கொண்டாடி மகிழ்ந்தது தான்
எங்கள் தமிழ்மண்…

இந்திராவை பெற்ற
மாநில மக்களுக்கே
இல்லாத உணர்ச்சி பெருக்கு
உனக்கெப்படி வந்தது தமிழா ?

காலங் காலமாய் பிறருக்கு
அடிமைப் பட்டே பழகிவிட்டது போலும் !

பிஜித் தீவு கரும்புத் தோட்டத்தில்
பிதுங்கிய விழியோடு உழைத்து
பொட்டல் காடு கழனி யெல்லாம்
பொன் விளைய செய்தவர்கள் தமிழர்கள்…

வெள்ள நீரைத் தேக்கி நிறுத்தி
வெற்றுக் குளங்களை நீரால் நிரப்பி
உலகுக்கே பாசன வழி காட்டிய
கல்லனை கட்டியவர்கள் தமிழர்கள்…

கடாரம், சாவகம், சிங்களம், சீயமென
கண்டம் கடந்து படை யெடுத்து
வெற்றி பெற்று தமிழ் கொடி
கட்டி ஆண்ட மக்கள் தமிழர்கள்…

எட்டி எவன் உதைத் தாலும்
எதிர்த்து நின்று போர் செய்து
வெற்றி பெறு வானேத் தவிர
எவரையும் அடிமை படுத்தாத தமிழர்கள்…

கண்டம் கடந்து வெற்றி பெற்ற
வரலாற்றை நீ மறந்தாயோ ?
அண்டம் முழுதும் சிதறியதால்
தமிழின் வீரம் இழந் தாயோ ?

இந்திய தேசியம் பேசி
இன்னும் எதனை இழக்க
காத்திருக்கிறாய் தமிழா ?

கடாரம், சாவகம் என
கண்டம் தாண்டி பறந்த
தமிழர்க் கொடியை
தாயகத் தமிழகத்தில்
பறக்கவைக்க முடியாமல்
வலுவற்ற தமிழா
வென்று விட்டோம்
என்ற திமிறா ?

விழுவது என்பது
எழுவதற்கான சந்தர்ப்பம்…
எழுவது என்பது
வழுவதற்கான சந்தர்ப்பம்…

வழுவாத பாதையில்
வளமோடு நடைபோட
பின்தங்கி நின்றது போதும்
பிடரியை குலுக்கும் சிங்கமாய்
எழுந்திடு தமிழா ! எழுந்திடு !
தமிழை கடவுளென தொழுதிடு !

செயற்கை இந்திய தேசியம் பேசி
தமிழனை ஏறும் ஏணி யாக்கி
மத்திய பதவி பெறத் துடிக்கும்
மதி கெட்ட அரசியல் கட்சிகள்…

சோறு இன்றி பசியில் வாடும்
தமிழனை மேலும் மயக்கி நிரந்தர
சோம்பேறி ஆக்க முட்டி முயலும்
ஆபாச வக்கிரம் நிறைந்த சினிமா…

அந்நிய இந்திய மோகத் தாலே
மண்ணின் வீரம் மகிமை மறந்து
தனித்த தன்மை மேலும் இழந்து
பணிந்து வாழ்வதை பண்பாய் நினைத்து
குனிந்து குறுகி தன்மானம் இழந்து
சினமா போற்றி சிதைந்து போன
சீற்றம் மறந்த தமிழ் இளைஞர்கள்…

தாய் மொழியை பேசாதே
என தான் பெற்ற பிள்ளையை
தானேக் கெடுக்கும் பெற்றோர்கள்…

தமிழினச் சமூகத்தின்
இன்றைய இழிநிலை போக்க
விடிவு வரும் ஒருநாள்…
தமிழ் தேசியத் திருநாள்…

'தமிழ் தேசியம்';
காலத்தின் கட்டாயம்…
உணர்வோம் இதனை
ஒருநாள் நிச்சயம்…
அதுவரை நமக்கு
அதுவே லட்சியம்…
***********************************************
                தோழமையடன்
----------------- க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************