THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Monday, December 11, 2006

சற்றே நில் தோழா…...

சற்றே நில் தோழா…...
கவிதை பொருள் : தமிழ் தேசியம் (சமூகம்)

தோழா… தோழா…
சற்றே நில்…

எங்கே செல்கிறாய் வேகமாக ?
எம் மண்ணில்
பிறந்த தமிழனே !

கரைவேட்டி வேடம் போட்டு
சகத் தமிழனை ஏமாற்றி ஓட்டு
பிச்சைக் கேட்க செல்கிறாயா ?

இல்லை
திரை மறைவில் இருந்து
ஒட்டு போட்டு மீண்டுமொரு
திருடனை தேர்ந் தெடுத்து
நீயாகவே ஏமாற போகிறாயா ?
இரண்டுக்கும் தானோ ?

'ஓ' சனநாயக கடமையல்லவா ?
ஏமாறுவதும் ஏமாற்றுவதும் கூட
சனநாயக கடமையா ? சொல்..

அண்டம் முழுக்க தாமே
ஆள்வது போல் எண்ணி
குண்டர் களைக் கொண்டு
'சனநாயக கடமை' நிறைவேற்றிய
ஒட்டுப் பொறுக்கும் கட்சிகளின்
வெறி யாட்டத்தை பார்த்த பிறகும்
ஓட்டுப் போடத் துடிக்கிறாயா ?

புரிகிறது உனது துடிப்பு !

இருள் நிறைந்த உன் வாழ்வில்
இனியாவது ஒளியேறும் என்று
சனநாயகம் காக்க செல்லும்
சகத் தமிழனே
இனியும் ஏமாறாதே
'சனநாயகம்' என்று
சதி அரசியல் நடத்தும்
சதிகார கும்பல்களிடம்…

அதிகாரப் பசிக்காக
அடித்துக் கொள்ளும்
அற்பமான அரசியல் கட்சிகள்
சதிகார கும்பல் ஆட்சியேற
எச்சரிக்கும் ஆரம்ப காட்சிகள் !

சாதி இன்றி வாழ்ந்து சாதிக்கலாம்
மதம் இன்றி மகத்துவமாய் வாழலாம்
ஆதி மனிதன் காலந் தொட்டே
மொழி யின்றி எவரேனும் வாழந்ததுண்டா ?

நாதி கெட்ட அரசியல் வாதிகளால்
நீதி மறந்து தெருவில் நாமும்
மோதிக் கொள்வது ஏனென்று
என்றாவது எண்ணிய துண்டா ?

கருத்து வேறுபாடுகள் கொண்ட
கட்சிகளில் பிரிந்து கிடந்தாலும்
இருப்பது நாம் அனைவரும்
இதே தமிழ் மண்ணில் தானே ?

உனக்கும் எனக்கும் எவருக்கும்
உறவும் உயிரும் தமிழ் தானே !
ஏனடா பிறகு சண்டை ?
ஏறுவதில் யார் முன்னணி என்றா ?
ஏமாற்றுவதில் யார் முன்னணி என்றா ?

உனக்கும் இங்கு யாவருக்கும்
உணவைப் படைத்த விவசாயி
தஞ்சை தமிழ் மண்ணில்
உணவின்றி தவித்த போது
உதவநீ அடித்துக் கொண்டாயா ?

காவிரி ஆற்றின் கரையில்
கண்ணீர் வடித்து துடித்த
விவசாயத் தோழர் களின்
வாழ்வு நிலை உயர
விரக்தியில் நீ சண்டை போட்டாயா ?

நம்மின மக்கள் ஈழநாட்டில்
சிங்களக் காடை யரால்
நசுங்கி சாகிற போதும்
நரகாசுரன் பெயரால் நீயோ
பட்டாசு வெடித்து அல்லவா
கொண்டாடிக் கொண்டி ருந்தாய் !

இந்திய நாட்டின் முதற் குடியாய்
தமிழன் வீற்றிருக்கும் போதே
இலங்கைத் தீவில் நம்மினம்
அழிவதை தடுக்க முடிந்ததா ?

உடலை உழைப்பால் வருத்தி
உணவுக் காகவே நெசவு
செய்து பிழைத்து வந்த
நெசவாளர் படைத்த துணிகளை
வாங்கவே மனமில்லை உனக்கு !

பாவம் !
உனக்கெங்கே நேரமிருக்கிறது ?

அந்நிய மோகத்தால் சீரழிந்து
அவர்தம் கழிசடைப் பொருட்களை
'ஜீன்ஸ் டீ-சர்ட்' எனத் தேடவே
நேரம் சரியாக இருக்கிறது !

தண்ணீரைத் தர மறுத்து பேசும்
கன்னடர் களுக்கு சொரனையே
நமது வேதாரண் யத்திலிருந்து
போகும் உப்பால் தான் பிறக்கிறது!

காலங் காலமாய் அதை
சுவைத்து உண்ட தமிழா
உனக்கது பிறக்கப் போவது
எப்போது ?

நிலத்தை சுரண்டி சுரண்டி
நிலக்கரி எடுத்து கொடுத்து
நீர்தர மறுக்கும் மாநிலங்களுக்கே
மின்சாரம் தருவது தான்
தமிழனின் வாழ்வியல் பண்பு !

வெறும் பண்பை மட்டும்
வைத்துக் கொண்டு
நீரில்லாமல் தவித்த நிலங்களுக்கு
பாசனம் செய்ய முடியாது !

பண்பை போற்றி வளர்த்துவிட்டு
பசியில் தவிப்பது தகுமா தமிழா ?

மற்றவர் உண்ண
சோறு படைத்தவன்
பெற்றது என்னவோ
வெறும் வறுமையை தான்…


வரி என்ற பெயரில்
இந்திய மைய அரசுக்கு
வாரிக் கொடுக்கும் தமிழனே
அந்நியன் வந்த போது
எதற்காக அவனை எதிர்த்தாய் ?

உரிமை பற்றி பேசினால்
ஊமையாகும் மைய அரசுக்கு
அடிமையாகி போனாயே இன்று !
சுதந்திரம் உனக்கு எதற்கு ?

இந்தியம் பேசும் தமிழனே
இங்கிருப்பதை சுரண்ட வரும்
மற்ற மாநில மக்களை
என்றாவது கவனித்ததுண்டா ?

அடகுக்கடை மார்வாடியிடம்
அடிமைப்பட்டது தமிழனின்
பணமும் பொருளும் மட்டுமல்ல
மானமும் மரியாதையும் கூட…

எங்கிருந்தோ புறப்பட்டு
இந்தியன் என்று சொல்லி
இங்கு வந்த மார்வாடிகளை
எந்த தமிழனாவது போவென
விரட்டியடித் திருப்பானா ?

மகாராஷ்டிர மண்ணில்
கூலி வேலைக்கு
பிழைக்கச் சென்ற
தமிழர்களை விரட்டினர்…

காரணம்
மண்ணின் மக்களுக்கே
உரிமையாம்…

அதே வார்த்தையை
நம் தமிழ் மண்ணில்
உரக்கச் சொன்னால்
நாம் 'தேசத் துரோகி'
'பிரிவினைவாதி'…

இல்லாத இந்திய தேசியம் பேசி
இன்னும் உன்னை சுரண்டுவதை
இனியாவது சற்று யோசி !

அந்நியர் நம்மை ஆண்ட போது
மண்ணின் மானம் வீரம் காக்க
தன்னுயிர் மறந்து போராடி வென்று
இன்னுயிர் நீத்த மூதாதையர் போட்ட
விதையில் முளைத்த தமிழா !

தண்ணீர் ஊற்ற தானாய் வளர
தமிழா நீ தாவரச் செடியல்ல !
செந்நீர் சிந்தி முன்னோர் வளர்த்த
நிழல் தரும் விருட்சம் !

நிழலை மட்டும் தந்துவிட்டு
காய் கனிகளை பக்கத்து
தோட்டத்தில் விழும்படி ஏனோ
போட்டுக் கொண்டி ருக்கிறாய் !

உன்னை தாங்கி நிற்கும்
தமிழ் நிலத்திற்கு நீ
என்ன செய்தாய் ? சொல்…

புல்கூட மிதிபட்டால் தானாய்
எழுந்து நிற்க முயலும் !
தமிழா நீ புல் அல்ல
புலியென
என்று உன் மனம் உணரும் ?

இந்திராவை சுட்டு கொன்ற
சீக்கிய இனத்தை சேர்ந்தவர்
இந்தியாவின் பிரதமராக கூட வரலாம்…

ஆனால்
ராசிவ் காந்திக் கொலையுடன்
சம்பந்தப் பட்ட தமிழர்கள்;
சமஉரிமைக்கு போராடினால் கூட
அது தீவிரவாதமாம்…
சம்பந்தப்பட்டவர்கள் தமிழர்கள்
என்ற ஏளனமெ அதற்கு காரணம் !

இந்திரா காந்தி இறந்த போது
துக்கம் தாளா முடியாமல்
தற்கொலை செய்து கொண்டவர்கள்
அத்தனை பேரும் தமிழர்களே !

பச்சைத் தமிழனையே
யார் அவரெனக் கேட்டு
கொச்சை படுத்தியவரைக் கூட
கொண்டாடி மகிழ்ந்தது தான்
எங்கள் தமிழ்மண்…

இந்திராவை பெற்ற
மாநில மக்களுக்கே
இல்லாத உணர்ச்சி பெருக்கு
உனக்கெப்படி வந்தது தமிழா ?

காலங் காலமாய் பிறருக்கு
அடிமைப் பட்டே பழகிவிட்டது போலும் !

பிஜித் தீவு கரும்புத் தோட்டத்தில்
பிதுங்கிய விழியோடு உழைத்து
பொட்டல் காடு கழனி யெல்லாம்
பொன் விளைய செய்தவர்கள் தமிழர்கள்…

வெள்ள நீரைத் தேக்கி நிறுத்தி
வெற்றுக் குளங்களை நீரால் நிரப்பி
உலகுக்கே பாசன வழி காட்டிய
கல்லனை கட்டியவர்கள் தமிழர்கள்…

கடாரம், சாவகம், சிங்களம், சீயமென
கண்டம் கடந்து படை யெடுத்து
வெற்றி பெற்று தமிழ் கொடி
கட்டி ஆண்ட மக்கள் தமிழர்கள்…

எட்டி எவன் உதைத் தாலும்
எதிர்த்து நின்று போர் செய்து
வெற்றி பெறு வானேத் தவிர
எவரையும் அடிமை படுத்தாத தமிழர்கள்…

கண்டம் கடந்து வெற்றி பெற்ற
வரலாற்றை நீ மறந்தாயோ ?
அண்டம் முழுதும் சிதறியதால்
தமிழின் வீரம் இழந் தாயோ ?

இந்திய தேசியம் பேசி
இன்னும் எதனை இழக்க
காத்திருக்கிறாய் தமிழா ?

கடாரம், சாவகம் என
கண்டம் தாண்டி பறந்த
தமிழர்க் கொடியை
தாயகத் தமிழகத்தில்
பறக்கவைக்க முடியாமல்
வலுவற்ற தமிழா
வென்று விட்டோம்
என்ற திமிறா ?

விழுவது என்பது
எழுவதற்கான சந்தர்ப்பம்…
எழுவது என்பது
வழுவதற்கான சந்தர்ப்பம்…

வழுவாத பாதையில்
வளமோடு நடைபோட
பின்தங்கி நின்றது போதும்
பிடரியை குலுக்கும் சிங்கமாய்
எழுந்திடு தமிழா ! எழுந்திடு !
தமிழை கடவுளென தொழுதிடு !

செயற்கை இந்திய தேசியம் பேசி
தமிழனை ஏறும் ஏணி யாக்கி
மத்திய பதவி பெறத் துடிக்கும்
மதி கெட்ட அரசியல் கட்சிகள்…

சோறு இன்றி பசியில் வாடும்
தமிழனை மேலும் மயக்கி நிரந்தர
சோம்பேறி ஆக்க முட்டி முயலும்
ஆபாச வக்கிரம் நிறைந்த சினிமா…

அந்நிய இந்திய மோகத் தாலே
மண்ணின் வீரம் மகிமை மறந்து
தனித்த தன்மை மேலும் இழந்து
பணிந்து வாழ்வதை பண்பாய் நினைத்து
குனிந்து குறுகி தன்மானம் இழந்து
சினமா போற்றி சிதைந்து போன
சீற்றம் மறந்த தமிழ் இளைஞர்கள்…

தாய் மொழியை பேசாதே
என தான் பெற்ற பிள்ளையை
தானேக் கெடுக்கும் பெற்றோர்கள்…

தமிழினச் சமூகத்தின்
இன்றைய இழிநிலை போக்க
விடிவு வரும் ஒருநாள்…
தமிழ் தேசியத் திருநாள்…

'தமிழ் தேசியம்';
காலத்தின் கட்டாயம்…
உணர்வோம் இதனை
ஒருநாள் நிச்சயம்…
அதுவரை நமக்கு
அதுவே லட்சியம்…
***********************************************
                தோழமையடன்
----------------- க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

1 comment:

Unknown said...

சிறப்பாக இருக்கிறது புரட்சிப் பூக்கள்.

காதல் கவிதைகளில் காட்டும் அக்கரையினை எழுச்சிக் கவிதைகளில் காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும். பயனுடையதாகவும் இருக்கும்.

தோழா நீ சிற்பங்கள் செதுக்குவதற்காக தயாரிக்கப்பட்ட உளி, அம்மிக் கொத்துவதில் உன் முனைகளை தேய விடாதே, அதற்காக அவ்வப் போது எழுதும் காதல் கவிதைகளையும் நிறுத்திவிடாதே. உளியின் கூர்மையை சோதித்துக்கொள்ள மாத்திரமே இத்தகு காதல் கவிதைகளை எழுது.

வாழிய நீ. சிறக்கட்டும் உன் பணி.

நன்றியுடன்
சோழன்